ஹாஸ்டல் அனுபவங்கள்
ரிஹானாவைப் பொருத்தவரை
அவள் கத்தோலிக்கத் துறவியாக வாழவேண்டும் என்று விரும்பி அதற்கான படிப்பை மேற்கொண்டு
வந்தாள். ஆனால், அங்கு நடக்கும் அட்டூழியங்கள், சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும்
பாதிரியார்கள், பாதிரியார்களுடன் உல்லாசமாக இருக்கும் பெண் துறவிகள், சபையில் நிறைந்துகிடக்கும்
ஜாதி மோதல்கள், ஜாதிரீதியான ஒடுக்குதல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு துறவறத்தைவிட்டு
வெளியே வந்து அசீனாவும் ஜீவாவும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள்.
ஒபீனா ஆப்பிரிக்காவில்
இருந்து இந்தியாவிற்குப் படிக்க வந்த ஒரு மாணவி. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்
ஒரு பெரிய கல்லூரியில் ஒபீனாவுடன் அசீனாவும் ஜீவாவும் படித்தார்கள். கல்லூரியில் இறைச்சி
சாப்பிடாதவர்களை உயர்வாகவும் இறைச்சி சாப்பிடுகிறவர்களை தாழ்வாகவும் நடத்திக்கொண்டு
இருந்தனர். அதிலும் ஆப்பிரிக்கப் பெண்ணான ஒபீனாவின் நிலை மிகவும் மோசம். கருப்பு நிறத்திற்காகவே
அவளைப் பலர் கேலி சிண்டல் செய்வது மட்டுமில்லாமல் பலநேரங்களில் நிறரீதியான துன்புறுத்தலையும்
கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். வெவ்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து வந்தாலும் பாதிக்கப்பட்ட
மாணவர்கள் அனைவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இந்தியாவுக்கு
வந்த பின் தோழிகள் கொடுத்த தன்னம்பிக்கையை வைத்து தான் ஒபீனா ஆப்பிரிக்காவில் தன் பெண்குறியில்
பதிக்கப்பட்ட கற்களை நீக்கினாள். முதல் முறையாக சிறுநீர் கழிக்கும்போது வலியில்லாமல்
சிறுநீர் கழிக்க முடிந்தது இந்தியாவில் தான். அதே சமயம், ஆப்பிரிக்காவை விட இங்கு மக்கள்
இவளை நிறரீதியாக மிகவும் துன்புறுத்தினார்கள். ஒருசமயம் அவள் ரோட்டில் நடந்துசென்றுகொண்டு
இருக்கும்போது, “ஐயோ! கருப்பு பிசாசு!” என்று சொல்லி அவளை அடித்து குற்றுயிறும் கொலை
உயிருமாக விட்டுச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தைக்
கண்ட தோழிகளும் தோழர்களும் “நாம் ஏதாவது செய்ய வேண்டும், வலியைத் திருப்பிக் கொடுக்க
வேண்டும்!” என்று தீர்மானித்தனர்.
“எப்பா! நான் கொலையெல்லாம்
பண்ணமாட்டேன்!” ஒதுக்கினர் சிலர்
“இல்ல, கொலை பண்ண
வேண்டாம், நம்மல பத்தின பயத்தை ஏற்படுத்தனும், நம்மோட வலியை அவங்க உணர வைக்கனும்!”
“அது எப்படி முடியும்?”
என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.
அப்போது தான்,
தாங்கள் படித்த உயிரியல், வேதியல், சமூகவியல், இயற்பியல் பாடங்களை எல்லாம் வைத்து சூப்பர்ஹீரோ
குழு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பயத்தை உருவாக்க பாம்பு போன்ற
அடையாளத்தை ஜீவா எடுத்துக்கொண்டாள், அதே போல நாகவாகனமும் தயார்செய்யப்பட்டது. இதில்
விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் கருத்துகளை திரட்டினார்கள்.
ஒவ்வொரு ஆடையிலும்
ஒவ்வொரு சிறப்பு அம்சத்தை வைத்தனர். கருநாகம் என்றழைக்கப்படும் ஜீவாவின் ஆடையில் அவளுடைய
உடலில் தேவையில்லாமல் வெளியேறும் வியர்வை உள்ளிட்ட நீர் அனைத்தையும் பயன்படுத்தி 1
வினாடியில் நாக்குப்பூச்சி அளவிலான சிறு பாம்புகளை உருவாக்கும் சக்தி வைக்கப்பட்டது.
அவை கடித்தாலும் மயக்கத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடியவை. மற்றவகையில் எதிரிகளின் கை,
கால், போன்ற உடல் உறுப்புகளுக்கு சிறு சேதாரத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடியவை. இதே போல
பல்வேறு வகையான ஆயுதங்களையும் கண்டுபிடித்து வைத்திருந்தனர். சிலநேரங்களில் இப்படிப்பட்ட
ஆயுதங்களை மின்சாரம் பாய்ச்சுதல், வேறு உயிரினங்களோடு சண்டையிடுதல், வேறு உயிரினங்களின்
திசையை மாற்றுதல் போன்றவற்றுக்காகவும் பயன்படுத்திக்கொள்வார்கள்.